செய்திகள்

விஜய், அஜித் இருவரும் அரசியலுக்கு வரலாம் - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-10-03 12:29 GMT   |   Update On 2018-10-03 12:29 GMT
விஜய், அஜித் இருவரும் அரசியலுக்கு வரலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vijay #Ajith #Thirunavukkarasar

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக டெல்லியில் இருந்து சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகிய 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சஞ்சய்தத்துக்கு 18 மாவட்டங்களும், ஸ்ரீவல்ல பிரசாத்துக்கு 14 மாவட்டங்களும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து தேர்தல் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். கட்சிக்கு தேர்தல் நிதி திரட்டும் பணி தொடங்கி உள்ளது.


பிரதமர் மோடியின் ஊழல் குறித்து வீடு தோறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படும். ஹைட்ரோகார்பன் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதை அனுமதிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 13 பேர் பலியாகி உள்ளனர். அந்த ஆலையை திறக்கக் கூடாது.

கருணாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதைவிட மோசமாக பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் உலாவருகிறார்.

விஜய், அஜித் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம். அதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Vijay #Ajith #Thirunavukkarasar

Tags:    

Similar News