தேனியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்
தேனி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் 04.10.2018 அன்று காலை 8 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இளநிலைப் பிரிவில் (மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை), முதுநிலைப் பிரிவில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுத் தொகை கோடிட்ட காசோலையாகவும், சான்றிழ்களும் வழங்கப்படும்.
எனவே போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவியர்கள் இணையதளத்தில் பதிவினை வருகின்ற 03.10.2018 அன்று வரை ஆதார் எண், புகைப்படம், படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவ -மாணவியர்கள் வருகின்ற 04.10.2018 அன்று காலை 8.00 மணிக்கு பதிவு செய்த ஒப்புதல் சீட்டுடன் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யும் முறை இனையதள முகவரியில் ஆன்லைன் சர்வீஸ் என்னும் மெனுவிற்கு சென்று ஆன்லைன் அப்ளிகேசன்ஸ் ஸ்கீம்ஸ் போட்டிகள் என்னும் மெனுவிற்கு சென்று மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் என்ற அட்டவணையில் பதிவு செய்து பதிவிற்கான ஒப்புதல் சீட்டை அச்சு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.