செய்திகள்

கொடுங்கையூரில் வாலிபர் விபத்தில் பலி

Published On 2018-09-22 09:29 GMT   |   Update On 2018-09-22 09:29 GMT
கொடுங்கையூரில் குப்பை லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
பெரம்பூர்:

கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். தச்சுவேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கேசவன் (26). இன்று காலை கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள தச்சுப் பட்டறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள குப்பை மேடு பகுதியில் காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் குப்பை லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கேசவன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரி மீது கற்களை வீசினார்கள். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

தகவல் அறிந்ததும் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். விபத்தில் இறந்த வாலிபர் கேசவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடலைப் பார்த்து பெற்றோர் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. #Accident

Tags:    

Similar News