செய்திகள்
அவினாசி அருகே காட்டுக்குள் பிணமாக கிடந்தவர் யார்?- போலீசார் விசாரணை
அவினாசி அருகே நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள காட்டுக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பச்சாம் பாளையம் நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள காட்டுக்குள் 45 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து இருந்தார். அவரது முதுகில் காயம் உள்ளது. இதனை பார்த்த அப் பகுதி மக்கள் அவினாசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? அவர் வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.