செய்திகள்
வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது
திருச்சி புத்தூர் 4 ரோட்டில் மீன் வெட்டும் அரிவாளால் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி புத்தூர் 4 ரோட்டில் கனரா வங்கியின் ஏ.டி.ஏம். எந்திரம் உள்ளது. இதில் கடந்த 15-ந்தேதி வங்கி மேலாளர் பாலாஜி தலைமையில் ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டு சென்றனர். பின்னர் 17-ந்தேதி மீண்டும் பணம் நிரப்ப வந்தபோது ஏ.டி.எம். எந்திரத்திரத்தை உடைக்க முயன்றதற்கான அடையாளம் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் பாலாஜி, உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திருச்சி-குழு மணி சாலை மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓடியுள்ளார். போலீசார் அவரை மடக்கிபிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தென்னூர் வெள்ளாளத் தெருவை சேர்ந்த கணேஷ்பாபு மகன் ரூபேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், புத்தூர் கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருடமுயன்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மீன்வெட்டும் அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.