ஆரணி ஆற்றில் புதிய மேம்பாலம்கட்டும் பணி தொடங்கியது
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு உள்ளது. மழை காலத்தில் ஆரணி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும். இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ல் ஆரணி ஆற்றின் மீது 450 மீட்டர் தூரத்துக்கு தரைப் பாலம் அமைத்தனர்.
இந்த தரைப்பாலம் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பேய் மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புறண்டு ஓடியதால் 65 நாட்கள் வாகன போக்கு வரத்து தடைப்பட்டது.
மாற்று பாதையில் வாகன போக்கு வரத்து நடந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க அரசு ரூ. 28 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடக்கி உள்ளது. தரைப் பாலத்தில் இன்னும் சில நாட்களில் வாகன போக்கு வரத்துக்கு தடைவிதிக்க உள்ளனர்.
எனவே வாகனங்கள் வந்து செல்வதற்காக தரைப் பாலத்தின் கிழக்கு திசையில் மாற்று சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள கண்மாய் வழியாக அதிகமாக தண்ணீர் வரும்.
எனவே வெள்ளநீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக ராட்சத குழாய்கள் மூலம் கண்மாய்கள் அமைக்கப்படுகின்றன.