செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் சுத்தியலால் அடித்து பெண் கொலை

Published On 2018-09-11 07:17 GMT   |   Update On 2018-09-11 12:29 GMT
சிந்தாதிரிப்பேட்டையில் சுத்தியலால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம் பஜார் தெருவில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மனைவி கற்பகம் (40). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒருமகளும், 9-வது படிக்கும் மகனும் உள்ளனர்.

கற்பகத்துக்கும், அதே பகுதியில் ரெக்ஸ் தெருவில் வசித்து வரும் மோசஸ் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோசசின் மனைவி சுகுணா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2 பேருக்கும் இடையே தகராறு நடந்த நேரங்களில் கற்பகம் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மோசஸ், தனது மனைவி பிரிந்து செல்வதற்கு கற்பகமே காரணம் என்று கருதினார். இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தார். கற்பகமும் முதலில் ரெக்ஸ் தெருவிலேயே வசித்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன்னர்தான் பஜார் தெருவில் அவர் குடியேறினார். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் கற்பகம் தான் ஏற்கனவே வசித்து வந்த ரெக்ஸ் தெருவுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோசஸ் திடீரென கற்பகத்தை சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் தலையின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் அலறி துடித்த அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மயங்கிய நிலையிலேயே கற்பகத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். சுத்தியலால் தாக்கியதில் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கற்பகத்தை காப்பாற்ற முடிய வில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். கற்பகத்தை கொலை செய்த மோசஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மோசஸ், ஏற்கனவே ஒரு முறை கற்பகத்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது போலீசார் மோசசை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். #Murdercase

Tags:    

Similar News