செய்திகள்

கடையம் அருகே பால் வியாபாரி மர்ம மரணம்

Published On 2018-09-06 08:13 GMT   |   Update On 2018-09-06 08:13 GMT
கடையம் அருகே பால் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:

நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் பச்சைமால் (வயது50) பால் வியாபாரியான இவர் பால் கறப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவார். அதே போல் நேற்று கோவிந்தபேரி கிராமத்திற்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் இன்று காலை வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் மந்தியூர் ரோட்டில் உள்ள ஒரு கோவில் அருகே ராமநதி கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பது இன்று காலை தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்தது மாயமான பால்வியாபாரி பச்சைமால் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பச்சைமாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வரும்போது கால்வாய்க்குள் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொன்று உடலை கால்வாயில் வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கிடந்த பச்சைமாலுக்கு 2 மனைவிகளும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News