செய்திகள்

மன்னார்குடியில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய 3 என்ஜினீயர்கள் கைது

Published On 2018-08-26 12:41 GMT   |   Update On 2018-08-26 12:41 GMT
குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய 3 என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூர் தெற்கு நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் தேவன்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஏட்டு விஜயகுமார், அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்தனர். அவர்கள் திடீரென ஏட்டு விஜயகுமார் மீது மோதுவது போல் வந்ததால் அவர் விலகி சென்றார்.

பின்னர் இதுபற்றி கேட்டபோது 3 வாலிபர்களுக்கும், ஏட்டுவுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் திடீரென அருகே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ஏட்டு விஜயகுமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது விஜயகுமாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

காயமடைந்த ஏட்டு விஜயகுமார், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஏட்டுவை தாக்கியது மாளிகைமேட்டை சேர்ந்த சரண்ராஜ் (வயது 26), விஜயகுமார் (27) மற்றும் காரகோட்டை மேலகாட்டை சேர்ந்த அருள்பிரசாத் (26) என்று தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது. பிறகு அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News