செய்திகள்

கோவை அருகே குடோனில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல்

Published On 2018-08-14 09:14 GMT   |   Update On 2018-08-14 09:14 GMT
கோவை மாவட்டத்தில் குடோனில் பதுக்கி வைத்த 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை:

கோவை கருமத்தம்பட்டி சோமனூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் விஜேந்திரகுமார் (வயது 38) என்பவர் குடோன் வாடகைக்கு எடுத்து தின்பண்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து இருந்தார்.

இந்த குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களையும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தின்பண்டங்களுக்கு நடுவே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

குடோனின் இருந்து 1 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 7 லட்சம். பின்னர் அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் குடோன்களில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 10-க்கும் மேற்பட்ட குடோன்களுக்கு சீல் வைத்துள்ளோம்.

மாநகர பகுதிகளில் நாங்கள் சோதனை செய்வதை அறிந்த வியாபாரிகள் தற்போது புறநகர் பகுதிகளில் குடோன்கள் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது முதற்கட்டமாக வந்த தகவலையடுத்து எம்.ஜி.ஆர். நகரில் சோதனை நடத்தி 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து புறநகர் பகுதிகளில் கண்காணித்து சோதனை நடத்த உள்ளோம்.
Tags:    

Similar News