செய்திகள்

சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தரையில் உருண்டு போராட்டம்

Published On 2018-08-14 09:11 GMT   |   Update On 2018-08-14 09:11 GMT
ஊத்துக்கோட்டை அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறிய வண்ணான் குப்பம்- பெரிய வண்ணான் குப்பம், ஆத்துபாக்கம்- தண்டலம் இடையே உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், உடனே சாலையை சீரமைக்க கோரியும் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியினர் பெரிய வண்ணான் குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அவர்கள் தரையில் உருளும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நக்கீரன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

28 நாட்களில் ரூ.60 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News