செய்திகள்

பாகூர் அருகே மதுக்கடையில் மோதல் - 3 பேர் காயம்

Published On 2018-08-13 11:41 GMT   |   Update On 2018-08-13 11:41 GMT
பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பாகூர்:

கடலூர் சம்மட்டிகுப்பத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி, (வயது52). இவர் அந்த ஊர் பிரமுகராக இருந்து வருகிறார். நேற்று இவர் பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். இவரது அருகே சோரியாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த சிவஞானம் (32), வைத்தி(30), முருகராஜ்(30) ஆகியோர் மதுகுடித்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் சிவமூர்த்தி தண்ணீர் பாக்கெட்டை பிரித்த போது எதிர்பாராதவிதமாக அருகே மதுகுடித்து கொண்டிருந்த சிவஞானம் உள்ளிட்ட 3 பேர் மீது தண்ணீர் கொட்டியது. இதற்காக சிவமூர்த்தி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரிடம் சிவராமன் உள்பட 3 பேரும் தகராறு செய்து அவரை தடியால் தாக்கினர். மேலும் மதுபாட்டிலால் குத்தினர்.

அப்போது கடலூர் பழைய நகரை சேர்ந்த ராஜசேகர் மற்றும் திருப்பாபுலியூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் தடுக்க முயன்ற போது அவர்களையும் சிவஞானம் தரப்பினர் தாக்கினர். இந்த தாக்குதலில் சிவமூர்த்தி, ராஜசேகர், சிலம்பரசன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து ராஜசேகர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து சிவஞானம் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகிறார்.

Tags:    

Similar News