செய்திகள்

தஞ்சையில் 3 பெண்களை தாக்கி நகை பறிப்பு

Published On 2018-08-11 12:18 GMT   |   Update On 2018-08-11 12:18 GMT
தஞ்சையில் வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை, பூக்கொல்லை அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரவிந்திரநாத். ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 58). ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி அம்சவள்ளி (56).நேற்று இரவு தாமரைச்செல்வி வீட்டில் அவரது மருமகள் நிம்மி மற்றும் அம்சவள்ளி ஆகிய 3 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு உருட்டு கட்டையுடன் 2 வாலிபர்கள் தாமரைச் செல்வியின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தாமரைச்செல்வி மற்றும் நிம்மி அணிந்திருந்த நகைகளை தரும்படி கேட்டுள்ளனர். அவர்கள் மறுக்கவே 2 பேரையும் தாக்கி 9 பவுன் நகையை பறித்துள்ளனர். இதை தடுத்த அம்சவள்ளியையும் தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து தாமரைச் செல்வி தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News