ஆலத்தூர் அருகே தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்:
மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சத்தின் திருச்சி கள விழிப்புணர்வு அலுவலகம் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் ஊராட்சி சமுதாய கூடத்தில் தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் பேசுகையில், பொதுமக்கள் திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலும் நிறுத்தவேண்டும், கழிவறை இல்லாத வீடுகளில் வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்ட அரசு 12 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இந்த மானிய தொகையை பெற்று தனிநபர் இல்ல கழிவறையை கட்டி பயன்படுத்தவேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவேண்டும், தூய்மை இயக்கத்தை ஒவ்வொரும் கடமையாக முன்னிறுத்தி எடுத்து செல்லவேண்டும் என்றார்.
மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன் பேசுகையில், பொது மக்கள் தூய்மையை கடை பிடிக்கவேண்டும். அப்போது தான் நோய்யற்ற வாழ்வை பெற முடியும். தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்தி சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும். தூய்மையான இந்தியாவை உருவாக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார்.
திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் பேசும் போது,
இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை அடுத்தாண்டு அக்டோபர் 2-ம்தேதிக்குள் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2014 மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம்தேதி பிரதமரால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா மக்கள் இயக்கமாக மாறிவிட்டது என்றார்.
தொடர்ந்து தூய்மை இந்தியா இயக்கம்குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்டேஷ்வரன், தூய்மை இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ராஜ பூபதி, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் மலர் கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கள விளம்பர உதவியார் ரவீந்திரன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் அசோக் ராஜ் நன்றி கூறினார். #Tamilnews