செய்திகள்

வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2018-07-28 09:13 GMT   |   Update On 2018-07-28 09:13 GMT
வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #robberycase

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அக்ரஹாரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஆறுமுகம் வீட்டை பூட்டி விட்டு மனைவியிடம் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோ, அலமாரிகளை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆறுமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதே தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வநாதன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி விஜயலெட்சுமி கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தற்போது மீண்டும் இங்கு இதே தெருவில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கிட்டாபட்டி மின் வாரிய ஊழியர் காசி என்பவர் வீட்டில் வாலிபர் ஒருவர் திருட முயன்றார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அந்த வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து விசாரித்த போது அந்த நபர் விக்ரமங்கலத்தை சேர்ந்த கணேசன் (27) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதே போல் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த தங்கம் என்பவரிடம் சேவுகம்பட்டியைச் சேர்ந்த செல்வம். தான் பெரிய ரவுடி என்று கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி செல்வத்தை பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

வத்தலக்குண்டுவில் அரங்கேறி வரும் தொடர் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர்.

போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்காமல் கொள்ளை சம்பவங்களை மறைப்பதிலேயே குறியாக இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News