செய்திகள்

முத்தியால்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2018-07-26 10:14 GMT   |   Update On 2018-07-26 10:14 GMT
முத்தியால்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்பனை பணம் ரூ.22 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முத்தியால்பேட்டை போலீசார் உதவியுடன் நேற்று மாலை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் சாதாரண உடையில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை அடையாளம் கொண்ட ஒருவர் அங்கிருந்து நைசாக நழுவினார். உடனே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்க பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாரம் வேலன் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 41)என்பதும் சென்டரிங் தொழிலாளியான இவர் தற்போது வேலை எதுவும் கிடைக்காததால் லாஸ்பேட்டையை சேர்ந்த சந்துரு என்பவரிடம் இருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்று வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புருஷோத்தமனையும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்துருவையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.22 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News