செய்திகள்

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம்

Published On 2018-07-23 12:09 GMT   |   Update On 2018-07-23 12:09 GMT
மழை குறைந்து வருவதால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. 120 அடிக்கு கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து 135 அடியை எட்டியது.

உச்சபட்ச அளவான 142 அடியை எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.20 அடியாக உள்ளது. வரத்து 2155 கன அடியாகவும், திறப்பு 2000 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5916 மி. கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 52.26 அடியாக உள்ளது. வரத்து 1646 கன அடி. திறப்பு 960 கன அடி. இருப்பு 2302 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.19 அடி.

பெரியாறு 6.4, தேக்கடி 5.4, கூடலூர் 1.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News