செய்திகள்

ஈத்தங்காடு அருகே விபத்து - வியாபாரி பலி

Published On 2018-07-08 14:44 GMT   |   Update On 2018-07-08 14:44 GMT
ஈத்தங்காடு சந்திப்பில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவர் கொட்டாரம் சந்திப்பில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பெரியசாமி தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். இன்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் பொருட்களை வாங்குவதற்காக பெரியசாமி கோட்டார் மார்க்கெட்டுக்கு வந்தார். இங்கு பொருட்களை வாங்கி விட்டு அவர் கடைக்கு திரும்பி சென்றார்.

சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி பெரியசாமி ரோட்டில் கீழே விழுந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த பலசரக்கு பொருட்கள் ரோட்டில் சிதறி விழுந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பெரியசாமி சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

தென்தாமரைகுளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெரியசாமி பலியானது பற்றி அவரது மனைவி லதாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும், அவரது மகனும் அங்கு வந்தனர்.

பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்தனர். பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News