அவனியாபுரத்தில் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை கொள்ளை
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் வள்ளலானந்தபுரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி விட்டு முத்துகிருஷ்ணன் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் முத்துகிருஷ்ணன் பள்ளிக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இதேபோல் சிந்தாமணி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டிய ராஜன் (வயது 30). ஜவுளிக் கடை ஊழியரான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தந்தை சோனை மட்டும் இருந்தார். மதியம் அவர் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் டி.வி. மேலே வைக்கப்பட்டிருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.
2 கொள்ளை சம்பவங்கள் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.