செய்திகள்
மரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் மரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகள் நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்யும் கிழங்கு மாவு மில்களுக்கு புரோக்கர்கள் மூலம் டன் கணக்கில் வாங்கி செல்லப்படுகிறது.
கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.6 ஆயிரத்து ஐநூறுக்கு வாங்கிச்சென்றனர். சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.7,500-க்கும், சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.9,500-க்கும் வாங்கிச்சென்றனர்.
ஜவ்வரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.