மெலட்டூர் அருகே மணல் கடத்த பாதை அமைத்தவர் கைது
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே வெண்ணாற்றில் கொத்தங்குடி மற்றும் சுற்று பகுதியில் வழித்தடம் அமைத்து அனுமதியின்றி சிலர் மணல் அள்ளிவந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்தும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.
பொதுப்பணித்துறையினர் கடந்த மாதம் வெண்ணாற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த வழித்தடங்கள் அனைத்தையும் ஜே.சி.பி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வாகனங்கள் வெண்ணாற்றில் இறங்காதவாறு வழித்தடங்களை அழித்து மணல் கடத்தலை அடியோடு தடுத்தனர்.
இந்தநிலையில் கொத்தங்குடி பகுதியில் தஞ்சாவூர் பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் ராமபிரபா ஆய்வு பணிக்காக சென்ற போது வெண்ணாற்றில் மணல் எடுக்க கொத்தங்குடி பகுதியை சேர்ந்த சுப்பையன் என்பவர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல்எடுக்க வழித்தடம் அமைத்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து மெலட்டூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து சுப்பையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.