திருக்கனூர் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி சங்கரி (வயது 38).
இவர் நேற்று காரில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டி சென்றார்.
அப்போது வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சங்கரி மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சங்கரியை அருகில் வயல் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான சங்கரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.