செய்திகள்

பாகூர் அருகே வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது - 19 பேர் காயம்

Published On 2018-03-22 10:53 GMT   |   Update On 2018-03-22 10:53 GMT
பாகூர் அருகே வாய்க்காலில் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
பாகூர்:

பாகூர் அருகே மணமேடு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியாருக்கு சொந்தமான நிலத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யும் பணி நேற்று நடந்தது.

இப்பணியில் பண்ருட்டி அருகே பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 18 பேர் ஈடுபட்டனர். மாலையில் அறுவடை செய்த மரவள்ளி கிழங்கை லாரியில் ஏற்றினர். லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (45) ஓட்டி சென்றார்.

பின்னர் அதே லாரியில் வீட்டுக்கு புறப்பட்டனர். வயலில் இருந்து லாரி புறப்பட்ட சிறிது தூரத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் வெட்டி உள்ள வாய்க்காலில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், லாரியில் பயணம் செய்த ராஜலட்சுமி (39), சத்தியவேணி (45), கலைவாணி (30), ஜெயா (38), மகாலட்சுமி (38), கவியரசி (37), மற்றும் சுகுமார் (35), சங்கர் (38), சந்திரசேகரன் (45), கலியன் (35), லாரி டிரைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட 19 பேர் லாரியில் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்து லாரியை அப்புறப்படுத்தி காயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News