செய்திகள்

கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம் - மீண்டும் பரோலில் வருகிறார் சசிகலா

Published On 2018-03-18 10:38 GMT   |   Update On 2018-03-18 10:38 GMT
புதிய பார்வை பத்திரிகை ஆசிரியர் ம.நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை பார்க்க சசிகலா மீண்டும் பரோலில் சென்னை வருகிறார். #Natarajan #Sasikala
சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது.

அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த இரு உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக தந்தார். உடல் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டன. இதன் பின்னரே நடராஜன் உயிர் பிழைத்தார். ஆபரேஷனுக்கு பின்னர் சுமார் ஒருமாதம் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை தேறிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி அவர் ஓய்வெடுத்து வந்தார். ஒவ்வொரு மாதமும் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.

இந்த நிலையில் நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.



மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அவரது வழக்கறிஞர் நாளை (திங்கட்கிழமை) பரோல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக தினகரனின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி இன்று பிறபகல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்திருந்தது நினைவிருக்கலாம். #Natarajan #Sasikala #VKSasikala
Tags:    

Similar News