செய்திகள்

ராகுல் அமைத்துள்ள 34 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவில் தமிழ்நாட்டில் 2 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

Published On 2018-02-18 09:42 GMT   |   Update On 2018-02-18 09:42 GMT
ராகுல் அமைத்துள்ள 34 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவில் தமிழ்நாட்டில் 2 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் மூத்த தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

காங்கிரசின் உயர்நிலைக் குழுவான 25 மூத்த தலைவர்கள் அடங்கிய காரிய கமிட்டியை அவர் கலைத்துள்ளார். அதற்கு பதிலாக 34 பேர் கொண்ட புதிய வழிகாட்டும் குழுவை அவர் நியமித்துள்ளார்.

இந்த குழுவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, ஜனார்த்தன் துவிவேதி, அசோக் கெலாட், சுஷில்குமார் ஷிண்டே, ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லக்குமார், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆனந்த்சர்மா, சி.பி.ஜோதி, திக்விஜய் சிங், பி.கே.ஹரிபிரசாத், கமல்நாத், மல்லிகார்ஜுன கார்கே, மோதிலால் வோரா, ஹேமோ பிரவோ சைகியா, ரன்தீப் சுர்ஜிவால், பி.எல்.புனியா, ஆர்.பி.என்.சிங், தீபக் பாபாரியா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் தமிழகத்தில் இருந்து ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லக்குமார் ஆகிய இருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த புதிய குழுவின் முதல்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. சோனியா தலைவராக இருந்தபோது காங்கிரஸ் காரிய கமிட்டியில் மூத்த தலைவர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். ராகுல் தலைவராக பதவி ஏற்றதால் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றார்கள் என தகவல் வெளியான நிலையில் காரியகமிட்டி கலைக்கப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News