செய்திகள்

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் நிறுத்தம்

Published On 2018-01-24 09:41 GMT   |   Update On 2018-01-24 09:41 GMT
கேரள மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வேலைநிறுத்த ஈடுபட்டுள்ளதால் கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
கோவை:

பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனங்களை இயக்காமல் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தனியார் பஸ் உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

போராட்டம் காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல கோவையில் இருந்து பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 24 பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல பொள்ளாச்சியில் இருந்து திருச்சூர், பாலக்காடுக்கு தினமும் 20 தமிழக பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை.

பஸ்கள் ஓடாததால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags:    

Similar News