செய்திகள்

சென்னை வருமான வரி அலுவலகத்தில் புகழேந்தி ஆஜர்: கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை

Published On 2017-11-13 06:41 GMT   |   Update On 2017-11-13 06:41 GMT
வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகி புகழேந்தி, இன்று சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சென்னை:

“ஆபரேஷன் கிளீன் மணி” என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதுதவிர கர்நாடகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலும் கடந்த 9-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தியும் ஒருவர். பெங்களூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (நவ.13) சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு சம்மன் அளித்தனர்.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி இன்று ஆஜரானார். அப்போது அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு புகழேந்தி விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News