செய்திகள்

புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கல்?

Published On 2017-08-22 14:52 GMT   |   Update On 2017-08-22 14:52 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கூறிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கி, கட்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தும் பொறுப்பையும் கொடுத்திருப்பது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சசிகலாவை நீக்க முடிவு செய்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் இன்று கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது நிச்சயம் அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும்.

தினகரன் அணியினர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கவும், எடப்பாடி அணியில் இருந்து மேலும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் அவர்கள் முயற்சிக்கலாம். அது போன்ற ஒரு நிலை நிச்சயம் குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்றனர். சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, டிடிவி தினகரனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
Tags:    

Similar News