செய்திகள்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை ஆளுநருடன் சந்திப்பு
அதிமுவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை 10 மணி ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
சென்னை:
ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்த அதேசமயத்தில் சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை பல மணி நேரம் நீடித்தது.
தினகரனுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர். ஜெயலலிதா நினைவிடத்திற்கு சுமார் 18 எம்.எல்.ஏ.க்கள் வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்(தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல்) செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தான் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். 3,000 பொதுக் குழு உறுப்பினர் அதை ஏற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தவர் சசிகலா. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர் முதல்வர்.
அன்று 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தோம். நாங்கள் அன்று எதிர்த்திருந்தால் அவர் முதல்வர் ஆகி இருக்க முடியுமா. எங்களிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா. எங்களை ஏன் மதிக்கவில்லை.
10 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த பன்னீர் செல்வத்தை வலுக்கட்டாயமாக சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன?. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் இல்லாத நிலையில், துணைப் பொதுச் செயலாளர் தான் கூட்ட முடியும்.
கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். நாளை காலை 10 மணி ஆளுநரை சந்திக்க அனுமதி அளிக்கப்படுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளனர்.