செய்திகள்

என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

Published On 2017-07-20 03:03 GMT   |   Update On 2017-07-20 03:03 GMT
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
புதுச்சேரி:

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் அங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் என்.எல்.சி. சுரங்கம் 1ஏ-வில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வழங்கப்படும் பணி, 19 நாட்களாக குறைக்கப்பட்டது. இதனால் 12-ந் தேதியில் இருந்து அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உதவி தொழிலாளர் ஆணையம் ஏ.ஐ.டி.யு.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை அழைத்தது. அதன்படி புதுச்சேரியில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது போல மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனை நிர்வாக தரப்பில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 
Tags:    

Similar News