செய்திகள்

கவர்னருக்கு யாரும் தடை ஏற்படுத்த வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2017-07-16 12:09 GMT   |   Update On 2017-07-16 12:09 GMT
கவர்னர் கிரண்பேடி செல்லும் இடங்களில் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என முதல் - அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

ஆட்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவர்னர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வரும் போது தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அவரை அனுமதிக்க கூடாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்ட சபையில் அறிவித்தார்.

அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பேட் ஆசிரியர் குடியிருப்பில் தூய்மை பணியை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்ய சென்றார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.என்.ஆர். பாலன் சம்பவ இடத்துக்கு வந்து கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அதுபோல் நேற்று கவர்னர் கிரண்பேடி ஊசுட்டேரியில் ஆய்வு செய்து விட்டு வழுதாவூர் சாலையில் சைக்கிளில் ராஜ்நிவாஸ் திரும்பிக் கொண்டு இருந்தார்.


அப்போது காந்தி நகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாட திரண்டு இருந்த காங்கிரசார் கவர்னர் கிரண்பேடியை கண்டதும் அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி செல்லும் இடங்களில் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என முதல் அமைச்சர் நாராயணசாமி திடீரென அறிவித்துள்ளார். அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

புதுவை மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் கிரண்பேடி நேற்றைய தினம் ஊசுடு ஏரி பகுதிக்கு சென்ற போது அவரை எதிர்த்து ஒரு சிலர் கோ‌ஷம் போட்டதாக செய்திகள் வெளியானது. புதுவையை பொறுத்த வரை மாநில மக்கள் அமைதியை விரும்பு கிறவர்கள். கண்ணியத்தை கடைபிடிப்பவர்கள்.

மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னருக்கு புதுவையில் பல பகுதிகளுக்கு செல்ல உரிமை உண்டு.

அதே போல் அமைச்சர்களும், நானும், எம்.எல். ஏ.க்களும் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறோம். நாள் தோறும் மக்களையும் சந்தித்து வருகிறோம். நிர்வாக ரீதியாக மாநில அரசின் உரிமைகளில் கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அதே வேளையில் மாநில நிர்வாகி ஒரு பகுதிக்கு செல்லும் போது ஆட்சேபம் தெரிவிப்பது புதுவை பாரம்பரியத்துக்கு ஏற்புடையது அல்ல.

ஆகவே, நான் பொதுமக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் வேண்டி விரும்பி கேட்டு கொள்வது என்ன வென்றால் யாரும் கவர்னர் செல்லும் போது அவருக்கு தடை ஏற்படுத்த வேண்டாம். அது நம்முடைய நாகரீகத்துக்கு ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News