செய்திகள்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம்: தினகரன் குரலை கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் புதிய முயற்சி

Published On 2017-06-23 10:15 GMT   |   Update On 2017-06-23 10:15 GMT
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் குரலை கண்டு பிடிக்க அவரது டி.வி. பேட்டியில் இருந்து குரல் மாதிரி எடுக்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.



இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் டெலிபோனில் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரம் டெல்லி போலீஸ் வசம் உள்ளது. இதில் தினகரன் குரலை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் கோர்ட்டில் டெல்லி போலீசார் அனுமதி கேட்டனர். குரல் மாதிரிக்கு தினகரன் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் தினகரனை டெல்லி கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்து விட்டது. இதைத் தொடர்ந்து வேறு வழியில் தினகரன் குரல் மாதிரியை எடுக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர். சமீப காலங்களில் தினகரன் தனியார் செய்தி சேனல்களுக்கு ஏராளமான பேட்டி அளித்துள்ளார்.

இதில் இருந்து அவரது குரல் மாதிரியை எடுக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள சில தனியார் தொலைக்காட்சி சேனல்களை அணுகி தினகரனின் பேட்டி அடங்கிய வீடியோவை பெற்றுள்ளனர். இதில் இருந்து குரல் மாதிரி எடுக்கப்படுகிறது.

அதன் பிறகு அந்த குரல் மாதிரியுடன் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் பேசிய டெலிபோன் குரல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், தினகரன் மீதான வழக்கில் ஆதாரத்தை நிரூபிக்க பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில் தினகரன் குரல் மாதிரிக்கு மறுத்து விட்டதால் அவர் அளித்த டி.வி. பேட்டியில் இருந்து குரல் மாதிரி எடுத்து நிரூபிப்போம் என்றனர்.

Tags:    

Similar News