செய்திகள்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அரிசி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-06-12 10:20 GMT   |   Update On 2017-06-12 10:20 GMT
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அரிசி வியாபாரி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது50), அரிசி வியாபாரி. இவருக்கு சோபியா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பெங்களூரில் படித்து வருகிறார்.

இதற்கிடையே சரவணன் நடத்தி வந்த அரிசி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நஷ்டத்தை ஈடுகட்ட சரவணன் பல்வேறு முயற்சிகள் செய்தும் அவருக்கு கைகூடவில்லை. இதனால் சரவணன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். மனைவி சோபியா ஆறுதல் கூறி வந்தாலும் அதனை ஏற்காமல் விரக்தியில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சோபியா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த வேளையில் சரவணன் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News