செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - சென்னை மண்டலம் 99.62 சதவீத தேர்ச்சி

Published On 2017-06-04 00:34 GMT   |   Update On 2017-06-04 00:34 GMT
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலம் 99.62 சதவீத தேர்ச்சி பெற்றது.
சென்னை:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலம் 99.62 சதவீத தேர்ச்சி பெற்றது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 3,972 மையங்களில் 16,347 பள்ளிகளை சேர்ந்த 16 லட்சத்து 60 ஆயிரத்து 123 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு நேற்று மதியம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.95 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் திருவனந்தபுரம் மண்டலம் 99.85 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடத்தையும், சென்னை மண்டலம் 99.62 சதவீதம் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தையும் பெற்றன. சென்னை மண்டலத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கோவா, டையூ-டாமன், அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 4,254 பேர் தேர்வு எழுதியதில் 3,803 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.4 சதவீதம்.

சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி முதல்வர் ராதிகா உன்னி கூறுகையில், ‘எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 199 பேர் 10-க்கு 10 கிரேடு (சி.ஜி.பி.ஏ.) பெற்றுள்ளனர். 606 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒருவர் மட்டும் 2-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்’ என்றார். 
Tags:    

Similar News