செய்திகள்

டிடிவி.தினகரன் முதல்வர் பதவிக்கு ‘குறி’ வைத்தார்: விசாரணையில் பரபரப்பு தகவல்

Published On 2017-04-27 06:09 GMT   |   Update On 2017-04-27 06:09 GMT
டிடிவி. தினகரன் முதல்வர் பதவிக்கு குறி வைத்தே இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை:

ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனிடம் போலீசார் சுமார் 40 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள டெல்லி போலீசார் மேலும் அவரிடம் இருந்து புதிய தகவல்களை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை விசாரணை குழுவினரிடம் டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பதில்கள் பற்றி டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் தீவிரமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காகத்தான் அவர் கோடிக்கணக்கில் பணபேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. அதில் வெற்றி பெற்றால்தான் முதல்-அமைச்சர் பதவியை எளிதாக பெற முடியும் என்று அவர் குறி வைத்திருந்தார்.


அதன்காரணமாகவே அவர் ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன் வந்தது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பல தடவை பேசியுள்ளார்.

நாங்கள் விசாரணை நடத்திய போது முதலில் அவர் இதை மறுத்தார். ஆனால் ஒரே கேள்வியை நாங்கள் 5 விதமாக கேட்ட போது அவர் சுகேசிடம் பேசியதை ஒப்புக் கொண்டார்.

அவரது பெங்களூர் நண்பர் மல்லிகார்ஜுனா இந்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவியாக இருந்துள்ளார். அவர்தான் முதல் தவணை தொகையாக ரூ.10 கோடியை திரட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளிடம் ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தை அவர்கள் கொச்சியை சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு ஷேக் பைசல் மற்றும் டெல்லி சாந்தினி சவுக்கை சேர்ந்த 2 பேர் மூலம் கைமாற்றியுள்ளனர்.

ஹவாலா ஏஜெண்டுகள் அனைவரும் எங்கள் விசாரணைக்குள் உள்ளனர். அவர்கள் ரூ.10 கோடி பணம் கைமாறியதை ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டனர். எனவே அடுத்தக் கட்டமாக சென்னை, கொச்சி, பெங்களூர் நகரங்களில் விசாரணையையும், சோதனையும் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

Similar News