செய்திகள்

கோவில் விழாவில் மோதல் எதிரொலி: தலையில் கல்லை தூக்கி போட்டு புதுவை கல்லூரி மாணவர் கொலை

Published On 2017-04-26 12:02 GMT   |   Update On 2017-04-26 12:02 GMT
கோவில் திருவிழாவில் மோதல் எதிரொலி காரணமாக புதுவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை நெசவாளர் நகர் பகுதியில் உள்ள அன்னை நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் சுதாகர் (வயது 21). இவர் காரைக்காலில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அன்னை நகரில் கடந்த வாரம் கோவில் திருவிழா நடந்து வந்தது. அப்போது வேப்பிலை வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் சுதாகருக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது சுதாகரின் நண்பர் இமான் அங்கு வந்தார். அவர் ராஜேசுடன் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் இமானை தாக்கினார். இந்த பிரச்சினையில் சுதாகருக்கும், ராஜேசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

இதையடுத்து சுதாகரை சமாதானப்படுத்தும் வகையில் அவரை ராஜேஷ் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். நேற்று இரவு அருகில் உள்ள தமிழக பகுதியில் உள்ள நாவற்குளம் சுடுகாட்டில் வைத்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ராஜேசும், அவருடன் வந்த 4 பேரும் சுதாகரை கடுமையாக தாக்கினார்கள். அத்துடன் அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து சுதாகர் தலையில் போட்டனர். இதில் தலைநசுங்கி அந்த இடத்திலேயே சுதாகர் உயிரிழந்தார். இன்று காலையில் தான் கொலை நடந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. ஆரோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

ராஜேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சுதாகரின் தந்தை சந்திரசேகர் வாய்பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News