செய்திகள்

மது குடித்து விட்டு தகராறு செய்ததால் காவலாளியை கொன்ற மனைவி

Published On 2017-04-26 07:02 GMT   |   Update On 2017-04-26 07:02 GMT
மது குடித்து விட்டு தகராறு செய்ததால் காவலாளியை கொலை செய்ததாக மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் சச்சின், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிப்பட்டு அருகே கோரக்குப்பம் ஏரிக்கரையில் ஆதிநாராயணன் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆதிநாராயணனை அவரது மனைவி, மகன், மருமகன், சம்பந்தி ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

ஆதிநாராயணனுக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஆதிநாராயணன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி ஜெயலட்சுமி, மகன் சச்சின், மருமகன் மோகன், சம்பந்தி கோபால் ஆகியோர் சேர்ந்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று ஏரிக்கரையில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News