திருபுவனை என்.ஆர்.காங். பிரமுகர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை
புதுச்சேரி:
திருபுவனையை சேர்ந்த தொழில் அதிபரும், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகருமான வேலழகன் கடந்த 19-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்கவில்லை.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினார்கள். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் 3 பேருக்கும் கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். எனவே, தான் அவர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்
இந்த 3 பேரிடமும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் விசாரணை நடத்த உள்ளார். அவர் விசாரணை நடத்திய பிறகு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதி பிரபல ரவுடி ஒருவரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் கூலிப்படையாக செயல்பட்டு கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி விசாரணை நடக்கிறது.