செய்திகள்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

Published On 2017-04-24 01:49 GMT   |   Update On 2017-04-24 01:49 GMT
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சென்னை:

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி தமிழக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து இயக்கத்தின் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே கல்வி தகுதி மற்றும் ஒரே வேலை இருந்தும் இரு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆதாவது கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் பணி அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு முன்பு பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, 2009-க்கு பின் பணி அமர்த்தப்பட்ட எங்களுக்கு அவர்களை விட ரூ. 10 ஆயிரம் வரை சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. நாங்கள் இருவரும் ஒரே வேலையை செய்தும் ஊதியத்தில் எங்களுக்கு வேறுபாடு உள்ளது. ஆகவே மாநில அரசு இந்த ஊதிய முரண்பாடுகளை களைய கோரி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.அப்போது 7-வது ஊதியக்குழுவில் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தற்போது இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். ஆனால் மாநில அரசு 7-வது ஊதியக்குழுவில் எங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News