குடும்ப தகராறில் தொழிலாளி மின் கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் சாரம் நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 41). இவருக்கு ராணி (35) என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கணபதி கூலி தொழில் செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ராணி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அட்டை தொழிற்சாலையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் கணபதி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தூங்கசென்று விட்டனர். கணபதி தினமும் வெளியே தூங்குவது வழக்கம்.
அதேபோல் அன்று இரவும் அவர் வெளியே சோபாவில் தூங்க சென்றார். காலையில் ராணி கண்விழித்து கணவரை பார்த்தார். ஆனால் அங்கு அவர் இல்லை. வெளியே வந்து பார்த்தபோது கணபதி வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி ராணி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.