செய்திகள்

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு

Published On 2017-04-20 12:29 GMT   |   Update On 2017-04-20 12:29 GMT
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தருண் விஜய்க்கு பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் இன்று கலந்து கொண்டார். அப்போது, தருண் விஜய் பங்கேற்பதற்கு பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிறவெறி கருத்து தெரிவித்த தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தருண் விஜயை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 



அப்போது தருண் விஜய் உடனடியாக பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேற வேண்டும், பல்கலைக் கழகத்தில் உரையாற்றக் கூட்டாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் மதசாயம் பூசும் வகையில் தருண் விஜய் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

முன்னதாக, கருப்பாக உள்ள தென்னிந்திய மக்களுடன் வட இந்தியர்கள் சேர்ந்து வாழவில்லையா என்று பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்து இருந்தார். தருண் விஜய்-ன் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் ஒருமித்த குரலில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Similar News