செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் உழவர் சந்தை விவசாயிகள் வேலைநிறுத்தம்

Published On 2017-04-18 10:46 GMT   |   Update On 2017-04-18 10:46 GMT
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் உழவர் சந்தை விவசாயிகள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 35 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் விவசாய சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இன்று கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளியில் உள்ள உழவர் சந்தை விவசாயிகள் 300 பேர், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு உழவர் சந்தைகளிலும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News