செய்திகள்

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

Published On 2017-04-11 18:34 GMT   |   Update On 2017-04-11 18:35 GMT
சேகர் ரெட்டி மற்றும் கூட்டாளிகள் என 3 பேரின் போலீஸ் காவலை ஏப்ரல் 25-ஆம் வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் போலீஸ் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் இவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் வீட்டிலும் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், இருவரது வீட்டிலிருந்தும் பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவர்களது போலீஸ் காவல் முடிந்ததால், வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 3 பேரின் காவலையும் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது ஒருபுறம் இருக்க ஜாமீன் கோரி சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. முன்னதாக 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News