செய்திகள்

அண்ணாசாலை நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது

Published On 2017-04-07 07:17 GMT   |   Update On 2017-04-07 07:17 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மதுவிற்பனை பாதிப்பை தடுக்க அண்ணாசாலை மாவட்ட சாலையாக மாற்றப்படுகிறது.
சென்னை:

சென்னை நகரின் மையப்பகுதியாக அண்ணாசாலை விளங்குகிறது. இது ‘மவுண்ட் ரோடு’ என்றும் அழைக்கப்படுகிறது.

தீவுத்திடல் அருகில் உள்ள முத்துசாமி பாலத்தில் தொடங்கி கிண்டி கத்திப்பாரா வரை உள்ள சாலை அண்ணாசாலை என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு அண்ணாசாலை சென்னை - திருச்சி சாலையுடன் இணைக்கப்படுகிறது. இந்த சாலை ஜி.எஸ்.டி. சாலை என அழைக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை எண்.45-ன் ஒரு பகுதியான இந்த ஜி.எஸ்.டி. சாலை பராமரிப்புக்குழு மாநில நெடுஞ்சாலையின் ஆளுகைக்குள் உள்ளது.

அண்ணாசாலையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள், மதுபான விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதுதவிர அரசின் டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகிறது.

கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியது.

இதனால் அண்ணா சாலையில் உள்ள ஓட்டல் பார்கள், கிளப்புகள் போன்றவைகளில் மதுவிற்பனை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.60 கோடி முதல் ரூ.80 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே வருவாய் இழப்பை சரிக்கட்ட அண்ணா சாலையை மாநில நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு மாவட்ட சாலையாக தரம் குறைவு செய்ய முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அதிகாரியிடம் கேட்ட போது, “அண்ணா சாலையை நெடுஞ்சாலை பட்டியலில் எடுத்து தரம் குறைக்கும் திட்டம் உள்ளது. அதில் அரசு முடிவு எடுத்தால் நெடுஞ்சாலை அந்தஸ்து நீக்கப்பட்டுவிடும்“ என்றார்.

Similar News