செய்திகள்

திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

Published On 2017-04-03 10:52 GMT   |   Update On 2017-04-03 10:52 GMT
திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் செல்போன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருக்கனூர்:

திருக்கனூர் காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அலி இவரது மகன் நூர்தீன் (வயது24). இவர் திருக்கனூரில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

இவரும் அதே பகுதியில் மற்றொரு செல்போன் கடையில் வேலைபார்த்து வந்த திருவக்கரையை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்த சுமன் (வயது21) என்பவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

திருக்கனூர் கன்னிமார் கோவில் அருகே ஒரு திருப்பத்தில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் அதிவேகமாக மோதியது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து திருக்கனுர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூர்தீனுக்கு நேற்று பிறந்த நாளாகும். பிறந்த நாளிலேயே நூர்தீன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News