செய்திகள்

பழனியில் கிரிக்கெட் விளையாட்டு பகையில் வாலிபருக்கு வெட்டு

Published On 2017-03-28 12:50 GMT   |   Update On 2017-03-28 12:50 GMT
பழனியில் கிரிக்கெட் விளையாட்டு மோதலில் வாலிபர் சரமாரியாக வெட்டப்பட்டார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி:

பழனி குறும்பபட்டி பாட்டாளி தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வடிவேல்(வயது23). கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடிய போது வடிவேலுக்கும், பிரசாந்த் என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது.

வடிவேலும், அவரது நண்பர்களும் சேர்ந்து பிரசாந்த், ஈஸ்வரன் ஆகியோரை கத்தியால் குத்தினர். கடந்த 6 மாதங்களுக்கு முன் மீண்டும் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரசாந்த் தரப்பினர் வடிவேலை அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வடிவேல் நேற்று அங்குள்ள ஒரு பள்ளி அருகே நின்றிருந்தார். தங்களைத்தான் தாக்க வந்திருப்பதாக நினைத்த பிரசாந்த், தனது மாமா, நண்பர்கள் முரளிதரன், மாதவன் உள்ளிட்டோரிடம் கூறினார். அவர்கள் ஆயுதங்களுடன் வடிவேலை சுற்றிவளைத்து வெட்டினர்.

பலத்த காயமடைந்த வடிவேல் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி முரளிதரன், மாதவன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Similar News