செய்திகள்

திண்டுக்கல் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2017-03-27 11:21 GMT   |   Update On 2017-03-27 11:21 GMT
திண்டுக்கல் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் செய்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக மழை இன்றி கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.

எனவே கிராம மக்கள் குடிநீருக்குகூட அல்லல்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

அதன்படி இன்று திண்டுக்கல் அருகே உள்ள ஜம்புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். அவர்கள் சிலுவத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது பெண்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக குடிநீர் வரவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் வந்தால்தான் இந்த இடத்தை நகருவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் அருகே சிலுக்குவார்பட்டியிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலை மதுரை- பெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Similar News