செய்திகள்

காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன்: பிளஸ்-2 மாணவியை மிரட்டிய கால்டாக்சி டிரைவர் கைது

Published On 2017-03-26 12:37 GMT   |   Update On 2017-03-26 12:37 GMT
தன்னை காதலிக்குமாறு பிளஸ்- 2 மாணவியை மிரட்டிய கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் அன்னதானப்பட்டி, பாஞ்சலி நகரை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (வயது 26). இவர் கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் பிளஸ்-2 படிக்கும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்து வந்தார்.

இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மாறனை அழைத்து இனிமேல் மாணவியை தொந்தரவு செய்யக்கூடாது என கூறி எச்சரித்தனர்.

இதையடுத்து மாணவிக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் என கூறி அபிஷேக் மாறன் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.

இந்த நிலையில் மீண்டும் மாணவிக்கு தொந்தரவு கொடுத்தார். நேற்று முன்தினம் மாணவியை அபிஷேக் மாறன் வழிமறித்து தன்னை காதலிக்காவிட்டால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி இதுபற்றி பெற்றோரிடம் கூறினார். மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் அபிஷேக் மாறனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்பதும், இதனை மறைத்து மாணவியை ஒரு தலைபட்சமாக காதலிப்பதாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததும் தெரியவந்தது.

Similar News