செய்திகள்
மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கொலை மிரட்டல் எதிரொலி: மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-03-22 06:52 GMT   |   Update On 2017-03-22 06:52 GMT
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமன் தெருவில் உள்ள மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டல் காரணமாக 6 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க 3 அணியாக போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி தினகரனும், ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனனும் களத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனித்து போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க தொண்டர்களின் ஓட்டுகளை பெறுவதில் 3 அணியினரும் தீவிரமாக உள்ளனர். இதனால் தேர்தல்களம் சூடு பிடித்து உள்ளது.

இதற்கிடையே மதுசூதனன் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.

அதில், மர்ம நபர்கள் அடிக்கடி வீட்டை சுற்றி வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் தீர்த்து கட்டுவோம் என்று கூலிப்படை மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை. கோதண்ட ராமன் தெருவில் உள்ள மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் மதுசூதனன் வீட்டிற்கு வரும் தொண்டர்களை கண்காணித்து வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமாக சுற்றும் நபர்களை பிடித்தும் விசாரிக்கிறார்கள்.

Similar News