செய்திகள்

மரப்பாலத்தில் தென்னைமரம் நடுரோட்டில் முறிந்து விழுந்ததில் காயம் அடைந்த வங்கி ஊழியர் பலி

Published On 2017-03-13 11:28 GMT   |   Update On 2017-03-13 11:28 GMT
மரப்பாலத்தில் தென்னைமரம் நடுரோட்டில் முறிந்து விழுந்ததில் காயம் அடைந்த வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை கொம்பாக்கத்தை அடுத்த பாப்பாஞ்சாவடி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28). இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கியில் பணம் கலெக்‌ஷன் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் புதுவை வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

மரப்பாலம் மூப்பனார் சிலை சதுக்கம் அருகே வந்தபோது திடீரென சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் முறிந்து மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ் மீது விழுந்தது. இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். எதிர்புறத்தில் வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த குமார் (53), சிவக்குமார் (41) ஆகியோரும் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தினேஷ் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News